“தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத் தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் 'கற்போம் எழுதுவோம்' என்ற புதிய கல்வித் திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கும் நோக்கில், மத்திய-மாநில அரசுகள் 60:40 என்ற நிதிப் பங்க ளிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முறைசாரா கல்வித் திட்டம், வயது வந்தோர் கல்வித்திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செயல் முறை உத்தரவில் (ந.க.எண்: 743/அ3/2020 நாள்: 28.10.2020 ல் 2011)15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத்தறிவற்ற வர்களின் எண்ணிக்கையையும், எழுத்தறிவற்ற 20 நபர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் தேர்வு செய்து தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவது வரவேற் கத்தக்கது.அதே நேரத்தில், இத்திட்டம் வெற்றிபெற களப்பணியாளர் களையும், கற்பித்தல் பணிக்கு தகுதியான ஆசிரியர்களையும் தனியாக நியமிக்க வேண்டும்.அதை விடுத்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களை இப்பணியில் ஈடுபடுத்துவது என்பது அவர்களது அன்றாட நடைமுறைப் பணியான கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்படும். இதனால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதைத் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
கடந்த காலங்களில், இதுபோன்ற வயது வந்தோர் கல்வித் திட்டங்களான முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம், கற்கும் பாரதம் போன்ற திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்ட போது அதற்கெனத் தனியாகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். விருப்பமுள்ள ஆசிரியர்கள் சிலர் மட்டும் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டனர்.தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை இப்பணிக்கென நியமித்து ஊதியம் வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அச்சுறுத்தல்...
இந்த திட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்ட செயல்முறை உத்தரவில் இல்லாத பல விதிமுறைகளை பல்வேறு மாவட்டங்க ளில் கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கி அச்சுறுத்தி வருகின்றனர்.
"கற்போம் எழுதுவோம்" மையத்தை பள்ளிகளில் அமைக்க வேண்டும். பள்ளி வேலை நாட்களில் 2 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும். தன்னார்வலர்களுக்கு ஊதியம் கிடையாது. தன்னார்வலர்கள் கிடைக்காவிட்டால் ஆசிரியர்களே பாடம் கற்பிக்க வேண்டும். 23.11.2020 அன்று வகுப்புக்கள் தொடங்க வேண்டும்.கற்போர் மையத்திற்கு வரவில்லையென்றால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கற்பிக்க வேண்டும். கற்போருக்குத் தேர்வு நடத்த வேண்டும் என்று நடைமுறை சாத்தியமற்ற விதிமுறைகளை வாட்சப் குழுக்கள் வழியே தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறத்தில், "ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நவம்பர் 16 முதல் பள்ளி திறப்பு குறித்து, பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும், மாணவர்களது பெற்றோர்களிடமும், பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் நவம்பர் 9 அன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும். அதன் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறைச் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது".இந்த ஊரடங்கு காலத்திலும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் 50 சதவீதம் பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதாவது, மாணவர்களுக்கு கட்செவியின் மூலம் பாடங்களை நடத்துகின்றனர். கல்வி தொலைக் காட்சியில் பாடங்களை கவனிக்க மாணவர்களை ஒவ்வொருவராக அலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கியும் பள்ளி செயல்பாடுகளில் தனி மனித இடைவெளியுடன் தமிழக அரசின் வேண்டு கோளுக்கிணங்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எச்சரிக்கை...
பண்டிகைக் காலத்தில் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்காவிட்டால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று கடந்த சில நாட்களாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வியாபார நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் மக்கள் பெருங் கூட்டமாக கூடுவதை ஊடகங்க ளில் வரும் படங்களும், செய்திகளும் தெரிவிக்கின்றன.
நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் பண்டிகை முடிந்து நவம்பர் 16 அன்று நேரடியாக பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாக மாட்டார்களா? நோய்த் தொற்றுக்கு ஆளாகி, நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் நோய்த் தொற்று பரவ காரணமாக மாட்டார்களா?
தேவைதானா இது?
இந்த நிலையில் கருத்துக் கேட்புக் கூட்டம் என்று அறிவித்திருப்பது நோய்த் தொற்றின் தன்மை குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டி உள்ளது.மாணவர்களுக்கு வகுப்பு நடந்து, அங்கு தொற்று ஏற்பட்டால், அப்பள்ளி யில் பயிலும் அந்த வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் இருக்குமா? அல்லது அவர்கள் வசிக்கும் மொத்தப் பகுதிக்கும் அதன் தாக்கம் இருக்குமா? என்பதை உணராமல், தனிப்பட்ட மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல் போல இந்த நோய்த் தொற்றை அணுகுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.பண்டிகைக் காலங்களில் கடைகளுக்குச் செல்பவர்கள் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்துள்ளார்களா? என்றால் அதுவும் தெரியாது.
பெரும் எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக் கணக்கான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் எந்தவித முன்யோச னையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவாகவே நவம்பர் 16 பள்ளி திறப்பு குறித்த முடிவைப் பார்க்க வேண்டி உள்ளது.மருத்துவம் சார்ந்த பேரிடர் குறித்து மருத்துவர்கள்தான் உரிய ஆலோசனையை வழங்க வேண்டும். ஆனால், பெற்றோரிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்கிறோம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
குழப்பத்தை தவிர்க்க...
கொரோனா வைரஸ் தாக்கம் இரண்டாவது அலைவரிசை ஆரம்பிக்கும் இக்காலகட்டத்தில் கவனமுடன் இருப்பது மிகவும் சிறந்தது.பொதுச் சுகாதாரத் துறைக்குப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை காக்கும் பொறுப்பு உள்ளது. சுகாதாரத் துறை இயக்ககம் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புக்கள் நவம்பர் 16 திறக்க வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு திறப்பது பாதுகாப்பானதா? என்ற சுகாதார அறிக்கையை வெளியிட வேண்டும்.பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் கடிதத்தை அடிப்படையாக கொண்டே பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், எந்தவித அடிப்படை ஆய்வும் மேற்கொள்ள வாய்ப்பில்லாத, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர்-ஆசிரியர் கருத்து மட்டும் பெற்று, பள்ளிகள் திறக்கப்படுவது பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கும்.பண்டிகை முடிந்த பிறகு மருத்துவக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, நோய்த் தொற்றும் தன்மை குறித்தும் அத்தகைய ஆய்வின் அடிப்படையில் மாணவர், பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் உட்பட அனைவரின் கருத்தையும் கேட்டு அதன் பிறகு தான் பள்ளி திறப்பு குறித்து அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு எந்த ஆய்வும் இல்லாமல், பள்ளி திறப்பு குறித்து குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர் - ஆசிரியர் கருத்தின் அடிப்படையில் பள்ளி திறப்பதற்கு அரசு அனுமதித்தால் இவ்வளவு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பயனற்றதாகி விடுவதோடு, மிகப் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிடும்.2020-2021 கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் பாதிப்பைக் கருத்தில் எடுத்து பாடத்திட்டத்தைக் குறைத்து வகுப்பு வாரியாக குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித் துள்ளது.பாடத்தைக் குறைப்பது, பள்ளி திறப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை மாநில அரசு அறிவித்தது. அக்குழு அறிக்கை தந்ததா? இல்லையா? என்ற தகவல் கூட இது வரை வெளியாக வில்லை.பாடத்திட்டம் குறைக்கப்படுமா? குறைப்படாதா? என்ற கேள்விக்கு இது நாள் வரை பதில் இல்லை. பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் பள்ளிகள் திறக்கச் சொல்வது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும்.
அவசரம் வேண்டாம்...
இக்கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம் குறித்த தெளிவான அறிவிப்பைப் பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக அரசு வெளியிட வேண்டும். சுகாதாரப் பேரிடரை உணர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது. பேரிடரின் தன்மையைச் சுகாதாரத் துறைதான் கணிக்க முடியும். பள்ளிகள் திறப்பு குறித்து அவசரம் காட்டாமல் மருத்துவ ஆலோசனைப் படி, பொதுச் சுகாதாரத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.உரிய விதிமுறைகளின் படி தனி மனித இடைவெளியுடன் சுகாதார துறை வழிகாட்டுதலின்படி சுழற்சி முறையிலும், மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் பள்ளிகளை திறக்க வேண்டும்.
கல்லாமையை அகற்ற...
ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் வாய்ப்பும் உள்ளதால் முதியோர் கல்வி மையத்தை பள்ளிகளில் அமைப்பது என்பதும், பள்ளி வேலை நாட்களில் இரண்டு மணி நேரம் முதியோர் கல்வி மையம் இயங்கும் என்பதும் பொருத்தமற் றதாக உள்ளது.அதிகபட்சமாக எத்தனை வயது வரை மையத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப் படவில்லை. மேலும்,15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவற்றவர்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் அவர்களுக்கு உணவுக்கே வழி கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள் வேலை நேரத்தில் பள்ளிக்கு வருகை தந்து இரண்டு மணி நேரம் படிக்க வேண்டும் என்பது நடைமுறைச் சாத்திய மற்றதாக உள்ளது.
எனவே, தமிழக அரசு 'கற்போம் எழுதுவோம்" திட்டம் வெற்றி பெற இதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆசிரியர்களைப் இப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
===அ.சங்கர்===
பொதுச் செயலாளர், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்